தமிழ் ப்ரெய்ல் - அறிமுகம்:
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மென்தமிழ் எப்படி பயன்படும் என்பதைக் காண்போம்.
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் படிப்பதற்கும் எழுதுவதற்கும் ப்ரெய்ல் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள். ப்ரேய்ல் என்பது மொழி அன்று. ஒவ்வொரு மொழிக்கும் விதவிதமான ப்ரெய்ல் குறியீடுகளைக் கொண்டு எழுத்துக்கள் குறிக்கப்படுகின்றன. ப்ரெய்ல் குறியீடுகளை உருவாக்கிய லூயி ப்ரெய்ல், ஃப்ரெஞ்ச் மொழி எழுத்துக்களுக்காக அவற்றை உருவாக்கினார். அவர் உருவாக்கிய முறையில் ஒவ்வொரு எழுத்தும் அதிகபட்சம் ஆறு புள்ளிகளைக் கொண்டிருக்கும். இந்த ஆறு புள்ளிகளும் மூன்று மூன்று புள்ளிகளாக தாயக் கட்டையில் உள்ளது போல இரண்டு நெடுவரிசையில் இருக்கும். முதல் நெடுவரிசைப் புள்ளிகளுக்கு 1, 2, 3 என்றும், இரண்டாம் நெடுவரிசைப் புள்ளிகளுக்கு 4, 5, 6 என்றும் எண் கொடுக்கப்பட்டது. இதைத் தவிர 3க்கு கீழ் 7ம் புள்ளியும், 6க்கு கீழ் 8ம் புள்ளியும் கொண்ட எட்டு புள்ளி ப்ரெய்ல் முறையும் உண்டு.
லூயி ப்ரெய்ல் 1, 2, 4, 5 புள்ளிகள் மூலமாக 10 வித குறியீடுகளை ஃப்ரெஞ்ச் மொழி எழுத்துக்களுக்காக வடிவமைத்தார். இந்த 10 குறியீடுகளைக் கற்றுக்கொண்டால், 3, 6 ம் புள்ளிகளைப் பொறுத்து அனைத்து ஃப்ரெஞ்ச் எழுத்துக்களையும் எண்களையும் எழுதிப் படிக்கலாம். ஆங்கிலமும் ஃப்ரெஞ்ச் மொழியைப் போலவே உரோம எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டதால், அதனை அப்படியே எடுத்துக்கொண்டார்கள். ஃப்ரெஞ்சில் அப்போது w எழுத்து இல்லாததால், அதற்கு மட்டும் ஆங்கிலத்தில் ஒரு வித்தியாசமான குறியீடு தரப்பட்டது. இப்படி ஐரோப்பவில் உள்ள பல்வேறு நாடுகள், தங்கள் மொழிக்கேற்ப சிறுசிறு மாற்றங்களுடன் லூயி ப்ரெய்லின் குறியீட்டு முறையை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்தியாவில் பல்வேறு மொழிகள் (தமிழ் உட்பட) இவ்வாறு ப்ரெய்ல் முறையை மொழிக்கேற்றபடி மாற்றி பயன்படுத்தியதால், இந்திய அரசாங்கம், பாரத ப்ரெய்ல் என்ற குறியீட்டுத் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்தக் குறியீட்டுத் தொகுப்பைத்தான் இந்தியாவில் உள்ள மொழிகள், சிற்சில மாற்றங்களுடன் பயன்படுத்துகின்றன. இந்திய மொழிகள் பெரும்பாலும் வல்லின வர்க்கங்களைப் பயன்படுத்துவதால், யூனிகோடில் எப்படி தமிழ் மெய்யெழுத்துக்கள் வரிசையாக இல்லாமல் வடமொழிகளுக்கு தகுந்தபடி தள்ளித்தள்ளி அமைத்திருப்பதுபோல், ப்ரெய்லிலும் தள்ளித்தள்ளி அமைந்துள்ளன. மேலும், ஆங்கில ப்ரெய்ல் குறியீடுகளை சார்ந்து பாரத ப்ரெய்ல் உருவாக்கப்பட்டதால், ஆங்கில எழுத்து ஒலிகளுக்கு ஒப்பான இந்திய மொழி எழுத்துக்களுக்கும் அதே ஆங்கில ப்ரெய்ல் குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மிச்சமுள்ள குறியீடுகள் மிச்சமுள்ள எழுத்துக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இப்படி குறியீடுகளை ஒதுக்கியது புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ள எளிதாக இருந்தாலும், ப்ரெய்லின் முக்கிய நோக்கமான தாய்மொழியில் எழுதப்படிப்பது என்பதை கடினமாக்கிவிட்டது. இதனால், லூயி ப்ரெய்ல், ஃப்ரெஞ்ச் குறியீடுகளை எளிதாகக் கற்றுக்கொள்ளும்படி வடிவமைத்தபோதும், தமிழ் எழுத்துக்களின் குறியீடுகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கின்றன. இதனால் பார்வையற்றவர்கள் தமிழில் குறைந்தபட்சம் வட எழுத்துக்களையும், எண்களையும் சேர்த்து 48 வித குறியீடுகளைக் கற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. அதாவது ஒரு குறியீட்டின் அமைப்பை வைத்து அது உயிரெழுத்தா? மெய்யெழுத்தா? குறிலா? நெடிலா? வல்லினமா? இடையினமா? மெல்லினமா? வடஎழுத்தா அல்லது எண்ணா? என்று வகை பிரிக்க முடியாததாக உள்ளது. மென்தமிழ் ப்ரெய்ல் இந்த குறை இல்லாதபடி உருவாக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், கணினியில் எளிதாகப் பயன்படுத்தும்படியும் உருவாக்கப்பட்டுள்ளது.